-

Loading latest news...

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!*

 *ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி  – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!*



*ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்!*


நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.


Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy)  மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர்.


2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அந்த காலத்து இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றளவும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.


இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.


மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தன.


18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.


இதனைத் தொடர்ந்து Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy)   மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர் வரும் காலத்தில்.   ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் “தாம் தூம்” ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பது உறுதி.

Joyalukkas Foundation 50 Joy Homes Handover Ceremony

 *'Joyalukkas Foundation 50 Joy Homes Handover Ceremony


எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்*


*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை*


சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் முறையாகத் திறந்து வைக்கப்பட்டு, அதற்கான சாவிகளை டாப் ஸ்டார் பிரசாந்த் வழங்கினார்.


பாதுகாப்பான மற்றும் உறுதியான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையின் தொடர் திட்டமான 'ஜோய் இல்லங்கள்" (Joy Homes) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது.


நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முயற்சிகள் மூலம் அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அறக்கட்டளை கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடிப்படையில் 'ஜோய் இல்லங்கள் திட்டம் 7.5 லட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 சதுர அடி பரப்பளவில், ஏறக்குறைய செலவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இல்லமும், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களுக்கு வெறும் தங்குமிடத்தை மட்டுமல்லாமல், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


வறுமை, இயற்கை சீற்றங்கள். நாள்பட்ட நோய்கள் மற்றும் மாற்றுத்திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். பாதுகாப்பான வீட்டு வசதியைப் பெறுவதற்குப் பெரும்பாலும் சிரமப்படும் சமூகக் குழுக்களே இவர்கள் ஆவர். நிலையான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம், இத்திட்டமானது இத்தகைய நலிந்த குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் வாய்ப்புகளைத் கட்டமைத்துக்கொள்ளவும், எதிர்காலத்திற்கான தேடிக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.


சிறந்த தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள இல்லங்களையும் சேர்த்து, கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ஜோய் இல்லங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மொத்த இல்லங்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கமாக, தெலங்கானாவில் மேலும் 50 இல்லங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன; அதேவேளையில், ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 50 இல்லங்களைக் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் அறக்கட்டளையின் வீட்டு வசதித் திட்டங்களின் வீச்சு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையானது தனது நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்த முன்னெடுப்புகளைச் சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் மையப்படுத்தியுள்ளது. குறிப்பாக, போதிய வசதிகள் அற்ற சமூகங்களில் நிலவும் கட்டமைப்பு சார்ந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையிலான திட்டங்களுக்கே அறக்கட்டளை முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மாதாந்திர டயாலிசிஸ் கருவிகளை விநியோகித்தல், டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குதல்,மருத்துவமனை வார்டுகளை புதுப்பித்தல் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் இரத்த தான இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தல் ஆகியவை இதன் சுகாதார முயற்சிகளில் அடங்கும்.


கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், அறக்கட்டளை அதன் 'ஜோய் ஆஃப் ஹோப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை ஆதரித்தது. கேரளாவின் திருச்சூரில், டயாலிசிஸ் மையம், நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு மற்றும் பிற சிறப்பு சேவைகளை உள்ளடக்கிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு வசதியையும் அறக்கட்டளை இயக்குகிறது.


கூடுதலாக, தையல் மற்றும் அழகுக்கலை திறன்களில் தொழில் பயிற்சி திட்டங்கள் மூலம், பெண்கள் நிதி சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையான திறன்களுடன் அதிகாரம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் முடியும்.


ஜோய் ஹோம்ஸ் திட்டம், நிலையான வீட்டுவசதி என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு அடிப்படை படியாகும். குடும்பங்கள் பாதுகாப்பான வாழ்க்கையையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்க உதவுகிறது என்ற அறக்கட்டளையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.


இந்நிகழ்வில் டாப் ஸ்டார் பிரசாந்த் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி இது 18 ஆம் ஆண்டு. இன்றைய நாளில் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பணியை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.


பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.‌


வீடில்லாத...நிலமில்லாத.. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான - அருமையான - வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.


ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது 'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்.


வீடு மட்டுமல்லாமல் மக்கள் எங்கெங்கு கஷ்டப்படுகிறார்களோ..! புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றாலும்... அவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். இந்த கை உதவி செய்வதை அந்த கைக்கு தெரியாமல் செய்கிறார்கள். அந்த குடும்பத்தினர் முழுவதும் பொதுமக்களின் நன்மைக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.  அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதனை தொடர்ந்து செய்து வருவது சாதாரண விசயம் அல்ல மிகப் பெரிய விசயம்.  


நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர். மனிதநேயமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். சிறந்த ரோல் மாடல்.  


தனி ஆளாக நின்று கடுமையாக உழைத்து இன்று ஜோய் ஆலுக்காஸ் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கி இன்றும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பவர். இது தொடக்கம் தான். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை இன்னும் விரிவடையும்.


ஜோய்ஸ் ஹோம் திட்டத்தில் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்

 மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்

Casting : Priyanka Arul Mohan, Park Hye‑jin, No Ho‑jin, Rishikanth, Jang Jaehyeon



Directed By : Ra. Karthik



Music By : Hesham Abdul Wahab



Produced By : Rise East Entertainment - Srinidhi Sagar




 


பள்ளி பருவத்தில் கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் கவரப்படும் பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர், தன் வாழ்க்கையில் காதல், அதனால் வரும் பிரச்சனைகள் என்று பல விசயங்களை எதிர்கொண்டாலும், கொரியா ஆசையை கைவிடாமல் இருக்கிறார்.



 


இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துயரத்துடன் செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துக் கொள்கிறார். பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலரால் ஏமாற்றப்பட்டு, திரும்பவும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். தான் பயணிக்க ஆசைப்பட்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அறியாத மக்கள் என அச்சத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்க்கையில் கொரியா எத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறது, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘மேட் இன் கொரியா’.


 


கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், அளவான நடிப்பு மூலம் படம் முழுவதையும் தனி ஆளாக சுமந்திருக்கிறார். இயற்கை எழில் மிகு ஊட்டி மற்றும் நவீனமயமான கொரியா, என இரண்டு வெவ்வேறு களங்களில் காட்சிகள் பயணித்தாலும், அனைத்திலும் பிரியங்கா மோகன் கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். சிரிப்பு, அழுகை, காதல், சோகம், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அளவான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கும் பிரியங்கா அருள் மோகன், குறைகளை கூட மறந்து படத்தை ரசிக்கும் மனநிலைக்கு பார்வையாளர்களை மாற்றி விடுகிறார்.



 


சிறிய வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் அவர் தன் வேலையை சரியாக செய்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.


 


பார்க் ஹே-ஜின் (Park Hye‑jin), நோஹூ ஜின் (No Ho‑jin), ஜாங் ஜேஹியான் (Jang Jaehyeon) ஆகிய கொரியா நாட்டு நடிகர், நடிகைகள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்திருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள் எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அழகாக தெரியும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும், அந்த களங்களுடன் சேர்த்து கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி முழு படத்தையும், கண்களுக்கான விருந்தாக ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். 


 


ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, திரைக்கதையில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.


 


மெதுவாக நகரும் திரைக்கதை என்றாலும், அதில் நிரம்பியிருக்கும் உணர்வுகள் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


 


வேகமும், விறுவிறுப்பும் இன்றி திரைக்கதை பயணித்தாலும், ஊட்டி மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் மேகங்கள் மற்றும் உடலைத் தழுவிச் செல்லும் குளிர்ந்த காற்றின் அனுபவம், பனி மழையினால் வெள்ளிச் சிதறல்களாய் ஜொலிக்கும் இரவு மற்றும் கண்கள் கூச செய்யும் பொன்னிற காலை, என கொரியாவை காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை மெய்மறந்து படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.



 


பிரியங்கா அருள் மோகன் என்ற ஒருவரை சுற்றி கதை நடந்தாலும், அவர் சார்ந்த கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைக்காமல், வளர்ந்து வரும் கலைஞர்களை நடிக்க வைத்து, அந்த கதாபாத்திரங்களை படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார். 


 


பயணங்கள் மற்றும் புதிய உறவுகளின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அழகியலோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், வாழ்க்கையில் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை நேர்மறையான எண்ணத்தோடு எதிர்கொண்டால் அவை நம் வாழ்வை வசந்த காலமாக மாற்றும் என்ற நம்பிக்கையை விதைத்து வெற்றி பெற்றிருக்கிறார். 

மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ தரமான தயாரிப்பு

போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்

 போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம் 

Casting : Raja Malaisamy, Paruthiveeran Saravanan, Nisha Dubey, Kadhal Sukumar, Rojan Leon, Rathinam, Doss Santhakumar, MS Selva



Directed By : Balu .M



Music By : Jaya K Doss



Produced By : On The Table Productions - Malaisamy A M Raja




 


காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மயக்க நிலைக்கு செல்கிறார். அந்த இளைஞரின் தந்தை சரவணன் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவர் என்ற தகவல் தெரிந்ததும், பிரச்சனையில் இருந்து தப்பிக்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் குழு, மயக்க நிலையில் இருக்கும் இளைஞரை நகரத்திற்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிடுகிறார்கள். மறுநாள் அந்த இளைஞர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தகவல் வருவதோடு, அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்து விடுகிறது.



 


தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார். ஆனால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை திணறுவதோடு, உண்மையான கொலை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்து, காவலர்கள் மீதான சரவணின் பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது. அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா ?, சரவணனின் மகனை கொலை செய்தது யார் ?, என்பதை காவல் நிலைய மரணத்தின் பின்னணியோடு சொல்வது தான் ‘போலீஸ் ஃபேமிலி’.


 


கதையின் நாயகனாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜா மலைசாமி, காவல்துறையினரின் எண்ணங்களையும், அவர்களது பழிவாங்கும் குணங்களையும் தன் நடிப்பின் மூலம் பிரதிபலித்திருப்பதோடு, ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டு கதறும் காட்சிகளில் கலங்கும்படி நடித்திருக்கிறார். புதுமுகம் என்றாலும் எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்திருப்பவர் தனது கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பு மூலம் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.



 


மகன் மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சரவணனின், அனுபவம் வாய்ந்த நடிப்பும், அதிரடியான நடவடிக்கையும் திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்ல பயன்பட்டிருக்கிறது.


 


சாதாரண வேடமாக அறிமுகமானாலும் திரைக்கதையின் திருப்பத்திற்கான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் காதல் சுகுமார்.


 


கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். 


 


சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.


 


ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நடிகர்களின் நடிப்பு திறனை சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.


 


ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் தனித்துவம் இல்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது.


 


எம்.எஸ்.செல்வாவின் படத்தொகுப்பு திரைக்கதையில் இருக்கும் சஸ்பென்ஸையும், அதன் மூலம் ஏற்படும் எதிர்பார்ப்பையும் இறுதி வரை பயணிக்க வைத்து படத்தை படபடப்போடு பார்க்க வைக்கிறது.


 


காவல்நிலைய மரணங்களை பின்னணியாக கொண்டு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையை நேர்த்தியாக கொடுத்திருக்கும் இயக்குநர் பாலு.எம், எதிர்பார்க்காத திருப்பங்களை யூகிக்க முடியாதபடி சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகளால் கதையை காட்சி மொழியில் விவரித்ததில் சில குறைகள் இருந்தாலும், தான் எடுத்துக் கொண்ட கதையை தொய்வில்லாத திரைக்கதையோடு, விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படமாக கொடுத்து இயக்குநர் பாலு.எம் வெற்றி பெற்றிருக்கிறார்.


 


மொத்தத்தில், ‘போலீஸ் ஃபேமிலி’ பொழுதுபோக்கிற்கு ஏற்ற படம்

வெஞ்சென்ஸ்’ திரைப்பட விமர்சனம்

 வெஞ்சென்ஸ்’ திரைப்பட விமர்சனம் 

Casting : Abarnathi, Ilavarasu, JohnVijay, Livingston, Y. Gee. Mahendran, Kaali Venkat, Saravana subbiah, Suresh Chakravarthi



Directed By : Rahul Ashok



Music By : Karthik Raja



Produced By : Ac Productions - A.P. Ashok Kumar




 


சிறு வயதில் இருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அபர்ணதி, அதற்கான முயற்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த பாராட்டும், புகழ்ச்சியும் மூன்று நாட்களில் அடங்கிப் போனதால், தன்னைப் பற்றி தொடர்ந்து மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தில் தீவிரம் காட்டுபவர், அதற்காக சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை செய்கிறார். 


 


வளர்ந்து மாவட்ட ஆட்சியராகி, தன் பதவியின் மூலமும், தனது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறும் அபர்ணத்திக்கு, முதலமைச்சர் மூலம் தடை ஏற்படுகிறது, அந்த தடையை தகர்த்தெறிவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதலமைச்சரே தான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய இடத்திற்கு முன்னேறுகிறார். ஆனால், அவர் முன்னேற்றத்திற்கு இணையாக எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்கொள்ள, அதனை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடிகிறார், என்பதை தமிழக பெண் அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக சொல்வதே ‘வெஞ்சென்ஸ்’.



 


கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, தைரியமும், புத்திசாலித்தனமும் நிறைந்த பலம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு, தைரியமான செயல் என தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருப்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் விதமான பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 


 


முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக நடித்திருக்கும் சரவண சுப்பையா ஆகியோரது கதாபாத்திரங்கள் தமிழக அரசியல் சம்பவங்களையும், அரசியல்வாதிகளையும் நினைவுப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 


டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.



 


எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது. கதாநாயகியை அழகாக காட்டியிருப்பவர், அவர் மனதுக்குள் இருக்கும் உணர்வுகளை அவரது முகத்திலும் தெரிய வைத்திருக்கிறார்.


 


கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையின் வேகத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. 


 


இம்ரானின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தியிருப்பதோடு, பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது.


 


ஒரு பெண்ணின் பழிவாங்கும் எண்ணம் மற்றும் தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, தமிழக அரசியல் சம்பவங்களை திரைக்கதையாக்கி படத்தை வேகாமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.


 


கதாநாயகியின் நடவடிக்கை, முன்னேற்றம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராகுல் அசோக், வெளிவராத சில விசயங்களை கூட தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


 


மாநில அரசியல் முதல் மத்திய அரசியல் என இந்திய அரசியலையும், அதன் மூலம் வளர்ச்சியடையும் கார்ப்பரேட் முதலாளிகள், தேர்தல் சமயங்களில் பணியாற்றும் வியூகம் வகுப்பாளர்களின் நடவடிக்கை, கட்சிக்குள் இருக்கும் அதிகார மோதல்கள் என அனைத்தையும் விரிவாக அலசி ஒரு முழுமையான அரசியல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக் படத்தின் முதல் பாதி எந்தவித தொய்வின்றி வேகமாக நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி நகரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் கதாநாயகியின் விஸ்வரூபம் மற்றும் அவருக்கான எதிர்ப்பு, அதை அவர் சமாளிக்கும் விதம் ஆகியவை அழுத்தம் இல்லாத காட்சிகளாக இருப்பதால், அவை திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், தமிழக அரசியல் சம்பவங்களையும், அரசியல்வாதிகளின் பின்னணியை இணைத்து திரைக்கதையை கையாண்ட விதம் படத்தை தொய்வில் இருந்து மீட்டெடுத்து விடுகிறது.



 


மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’ அதிர வைக்கும் அரசியல் படம்.

கொலைச்சேவல்’ திரைப்பட விமர்சனம்

 கொலைச்சேவல்’ திரைப்பட விமர்சனம்


Casting : Kalaiyarasan, Deepa Balu, Bala Saravanan, Gajaraj, Vijay Sathya, Aadhav Chandra, Akaran Venkat, Vijayalakshmi, Jayalakshmi, Rajamani, Dhanalakshmi, Manjula, Kayal, Manimegalai



Directed By : VR. Thudhivaanan



Music By : Santhan



Produced By : RP Films - R.P.Bala - Kousalya Bala




 


நாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள். ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். 


 


குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார். அது என்ன ? என்பதை சமூகத்தில் காலம் காலமாக நடக்கும், நடந்துக் கொண்டிருக்கும் கொடூர சம்பவத்தின் வலியாகவும், வேதனையாகவும் சொல்வதே ‘கொலைச்சேவல்’.



 


கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்பே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இதில் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் எளிமையான கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார்.


 


கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, பார்த்த உடனே பிடித்துப் போகும் குடும்ப பாங்கான முகத்தோடு வலம் வருகிறார். கதபாத்திரத்திற்கான பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, எதார்த்தமான மற்றும் இதயம் கனக்க செய்யும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார். குறிப்பாக அழுத்தமான காட்சிகளில் ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாக அடி உதை வாங்கி கடினமான காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு நடித்திருக்கும் அவரை அதற்காகவே தனியாக பாராட்டலாம்.


 


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால், இறுதிக் காட்சியில் அவரது வருகை புரண்டு அழுவதை தவிர வேறு எதையும் செய்யாதது ஏமாற்றமே.


 


வசனம் பேசாத கதாபாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் வெறித்தனத்தை தன் முகத்திலும், நடிப்பிலும் வெளிக்காட்டியிருக்கிறார் கஜராஜ். 



 


விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் மண் சார்ந்த மக்களாக பயணித்திருக்கிறார்கள்.


 


பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கொலை சம்பவத்தை காட்சிப்படுத்திய விதம் அதீத வன்முறையோடு இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் வலி மற்றும் வேதனையை மக்கள் மனதில் கடத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


 


சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மனித உணர்வுகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது. அமைதியான சுழல் என்றாலும், வரப்போகும் ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் பழைய பாடல் மற்றும் பதற்றமான சூழலை விவரிக்கும் பீஜியம் ஆகியவை பார்வையாளர்களை கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகிறது.


 


காதல், எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான சம்பவம் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை, சுருக்கமாக சொன்னாலும், மிக சுவாரஸ்யமான படமாக நகரும்படி பணியாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ்.


 


சமூகத்தில் நடந்த மற்றும் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரமான செயலை மையக்கருவாக எடுத்துக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், அதை வலியும், வேதனையும் மிக்கதாக காட்சிப்படுத்தியிருந்தாலும், அதனுள் இருக்கும் காதலை அழகியலோடும், உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.


 


இவ்வளவு உணர்வுப்பூர்வமான காதல் தம்பதிக்கு இப்படி ஒரு நிலையா!, என்று படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் அவகையில், படத்தின் முக்கிய காட்சிகள் எதார்த்தமாக படமாக்கப்பட்டிருந்தாலும், அவை வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுழிக்க வைக்கிறது.


 


ஒரு திரைப்படமாக பார்க்கும் போது, ஆரம்பத்திலே கதை இந்த பிரச்சனையை பற்றி தான் பேசப்போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதியில் யூகித்து விட முடிகிறது. யூகிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், பல குறியீடுகளுடன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அதில் முக்கியமானது நிறைசூலி தெய்வம். 



 


இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது ஏன் ?, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கான தண்டனை என்ன ?, இத்தகைய சமூக பிரச்சனைகளை வோரோடு களைய என்ன செய்ய வேண்டும் ?, இப்படி எந்த கேள்வியும் கேட்காமல், எப்படிப்பட்ட தீர்வும் சொல்லாமல், இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தால் பாதிக்கப்படுகிறவர்களின் வலியை மட்டுமே மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறப்பான மேக்கிங் மூலம் அதை திறம்பட செய்திருக்கிறார்.


 


மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ வலி.

KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*

 *காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது*



சென்னை, மார்ச் 13, 2026: ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் " முத்து என்கிற காட்டான் " வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.


முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது.


இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது .


முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.


நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.


டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்

மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’-ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.




TRAILER LINK: https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y



*KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*


Chennai, March 13, 2026: Following its internet-shattering teaser, which unveiled the bizarre mystery of a severed head, JioHotstar has dropped the gripping trailer for its upcoming series ‘Muthu Alias Kaattaan’, diving deeper into the show's intriguing world.


While the teaser ignited curiosity with Muthu's shocking severed head, the trailer expands the narrative, revealing layered accounts from characters who paint vastly different portraits of the man. Feared outlaw or misunderstood hero? As perspectives clash, the mystery deepens, slowly unraveling the truth behind Muthu and the events that led to his gruesome discovery.


Headlined by Vijay Sethupathi, the series also features Milind Soman, Sudev Nair, and Muthukumar, among other prominent faces.


Talking about the trailer, Vijay Sethupathi, said, “When Manikandan first narrated Kaattaan to me, he shared a six-page synopsis. I was instantly hooked by the character and the world he had imagined. Working on this series gave me a real sense of peace as an actor. I truly hope that when audiences watch it, they walk away with something meaningful to reflect on.”


Sharing his thoughts on the trailer, Milind Soman, said, "As someone who is selective about projects he chooses, Kaattaan stood out for its gripping narrative and bold characters and Sivettan was a role I couldn't resist. Working on the series was an absolute thrill from the immersive sets, sharp direction, and collaborating with Vijay Sethupathi and the team brought this enigmatic figure to life in ways that pushed me creatively."  


The series is created by National Award-winning filmmaker M. Manikandan, known for his distinctive storytelling voice. Direction is helmed by M. Manikandan and B. Ajith Kumar, while acclaimed cinematographers Madhu Neelakandan and N. Shanmuga Sundaram craft the striking visual language of the series. The music is composed by Rajesh Murugesan, adding a powerful sonic dimension to the world of Kaattaan.

Muthu Alias Kaattaan will stream from March 27 exclusively on JioHotstar in seven languages — Tamil, Hindi, Telugu, Malayalam, Kannada, Marathi, and Bengali.



TRAILER LINK: https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y

சிறை” திரைப்பட வெற்றிவிழா !!*

 *சிறை” திரைப்பட வெற்றிவிழா !!



செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.


படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.


பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.


இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வினில்


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,


இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.


இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.


அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.


தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.


இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” நன்றி.



இயக்குநர் தமிழ் பேசியதாவது..,


இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.


இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது. இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.


எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், நன்றி.


நடிகர் LK அக்‌ஷய் குமார் பேசியதாவது..,


“இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.


ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.


இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.


நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது.., 


“இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.


ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.


இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.


நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.


என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.


சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.


என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி.


இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,


“இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.


படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.


இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு, எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.


அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.


இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.


இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.


இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.


சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.


இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம். மீண்டும் ஒருமுறை இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,


முதலில் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நாம் ஒரு படத்தை எடுத்து முடிப்பது வரை தான் செய்ய முடியும். ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை பற்றி நீங்கள் எழுதியதும், பேசியதும் தான் இன்று இந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் சேர்த்திருக்கிறது.


பிரஸ் ஷோ முடிந்த பிறகு நீங்கள் பலரும் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள். சிலர் அழுதபடியே இந்த படத்தைப் பற்றி கூறினீர்கள். அந்த உணர்வுகளே பின்னர் மக்களிடமும் சென்றடைந்தது. நீங்கள் எந்த விதமான தவறும் இல்லாமல் நேர்மையாக இந்த படத்தை பற்றி எழுதியது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.


முதலில் தமிழ் இந்த கதையை சொல்ல வந்தபோது, இந்த படத்தை கண்டிப்பாக அக்ஷய் தான் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு அவரிடம் ‘நீங்களே இந்த படத்தை இயக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன். ஆனால் அவர் ‘இந்த கதையை நான் இயக்க முடியாது, கதையை மட்டும் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் சுரேஷ் இந்த படத்தில் இணைந்தார்.


சுரேஷ் இணைந்த பிறகு இந்த கதையை எப்படி ஒரு புதிய முறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம். பின்னர் விக்ரம் பிரபுவிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப் பற்றி விவரமாக பேசினார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.


அதேபோல் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி. அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், இந்த படத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார். இசை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.


அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம். சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான். ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன். இந்த பயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவி செய்தார்.


இன்று இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்.

kadhal reset repeat movie Review

 kadhal reset repeat movie Review 


Casting : Madumkesh, JiyaShankar, Arjun Ashokan, MS Bhaskar



Directed By : Vijay



Music By : Harris Jayaraj



Produced By : D Studios & Maali and Manvi Movie Makers




 


நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் மதும்கேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஜியா சங்கர், அவரது நண்பர் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையே ஜியா சங்கர் மரதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார் மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்பதை முக்கோண காதல் கதையாக சொல்வதே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. மனதில் காதல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ஏக்கத்தோடு பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் மதும்கேஷ். இறுக்கமான முகம், நடவடிக்கைகளில் பொறுமை என்று தனியாக தெரியும் குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.


 


நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதை என்பதால் அவருக்கு நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.


 


முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் அசோகன், தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


 


படம் முழுவதும் வெளிநாட்டில் நடப்பதால், அழகான இடங்களை தேடிப்பிடித்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எங்கு கேமரா வைத்தாலும், பசுமையும், பழமையும் நிறைந்த இடங்களாக இருப்பதால் ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா, அத்தனை அழகையும் சிந்தாமல் சிதறாமல் தன் கேமராவில் பதிவு செய்து கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார். ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை மற்றும் முக்கியமான பீஜியம்கள் ஏற்கனவே அவரது இசையமைப்பில் வெளியான படங்களின் சாயலோடு பயணித்தாலும், காதல் கதைக்கு உயிரூட்டியிருக்கிறது.


 


படம் முழுவதும் நிரம்பியிருக்கும் காதல் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதில் இறக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.


 


முக்கோண காதல் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளை திரைக்கதையின் முக்கியத்துவ காட்சிகளாக வைத்துக் கொண்டு படத்தை நகர்த்தியிருக்கிறார். 


 


அழகான காதல் கதை, அதை சுமந்து செல்லும் கதாபாத்திர தேர்வும் சரியாக அமைந்திருந்திருப்பதோடு, ஸ்காட்லாந்து என்ற அழகு நிறைந்த கதைக்களத்தில் அவற்றை சொல்லும் போது, திரையில் தெரியும் பிரமாண்டம் திரைக்கதையில் இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனம். இருந்தாலும், கதாநாயகியின் நடிப்பு, காதலை அவர் உணர்ந்த பிறகு ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது.


 


மொத்தத்தில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ ஒரு முறை பார்க்கலாம்.

நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத்

பத்திரிகை செய்தி

 நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத்


அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய, பாராட்டிய காணொளி கண்டேன். ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது எனக்கு அதிர்ச்சியூட்டும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.

  இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல... உங்கள் சகாக்களே புண்பட்டு பேசிய ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ் தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது. நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என். டி.ஆர் , ஏ.என்.ஆர், எஸ் வி ரங்காராவ், சாவித்திரி, சாராதாம்மா, வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம். திரு எம் ஜி ஆர் அவர்கள், வெறும் நடிகர் மட்டும் அல்ல. தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை. திரு என்.டி ராமாராவ் அவர்கள் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்திருக்கிறார். நான் விடயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமா காரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அம் மன்னிப்பு வரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்.


# தென்னிந்திய நடிகர் சங்கம்