-

Loading latest news...

TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* 



KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்... 


ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., 

நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி. 


படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது.., 

இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி. 


நடிகை ஷிரித்தா பேசியதாவது.., 

இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது.


இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.

நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 


நடிகர் இளவரசு பேசியதாவது.., 

ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.


இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.


புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.


நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி. 


ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது.., 

“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.

நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது.., 

இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி. 


நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது.., 

இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!*

வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது! 



ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.


மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.


இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 


இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.


Link :  https://youtu.be/OS1131P0Qw8?si=jQg0g4JV1tQhWmoK

பைக்கர்’ திரைப்பட விமர்சனம்

 பைக்கர்’ திரைப்பட விமர்சனம்


தந்தை ராஜசேகர் போல் தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்று சர்வானந்த் விரும்புகிறார். அவரது விருப்பம் மற்றும் ஈடுபாட்டை பார்த்து அவரது குருவான தந்தை ராஜசேகர் இத்துறையில் அவர் மிகப்பெரிய சாதனையாளராக வருவார் என்று நம்புகிறார். சர்வானந்தும் இத்துறையில் யாரிடமும் இல்லாத தனித்திறன்களோடு வலம் வருகிறார். னம் ராஜசேகர் எதிர்பார்த்தது போல், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை தன் மகன் மூலமாக உலக அரங்கில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தான் நினைத்ததை தன் மகன் செய்து முடிப்பான் என்ற அதீத நம்பிக்கையோடு இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றி விடுகிறார். முதல் பந்தயம் முடிந்த உடன் அவர், பந்தயத்தில் இருந்தும், தனது தந்தையிடம் இருந்தும் விலகிச் சென்று விடுகிறார். மகன் செய்த தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுவதோடு, அவருக்கு மோசடி நபர் மற்றும் துரோகி என்ற அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால், அவர் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வரும் சர்வானந்த், தந்தையின் நிலை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக களம் இறங்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது தந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவரது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?, அவர் தந்தையை பிரிந்து செல்ல காரணம் என்ன ? என்பதை காட்சி விருந்தாக சொல்வது தான் ‘பைக்கர்’.

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்திற்காக சர்வானந்த் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இரண்டு விதமான தோற்றங்களுக்காக உடல் எடை குறைத்திருப்பது, ஸ்டைலிஷான தோற்றம் உள்ளிட்ட அனைத்திலும் ஒரு முழுமையான விளையாட்டு வீரராக திரையில் ஜொலிஜொலிக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசம் செய்யும் காதலனை ஊக்கப்படுத்தி தைரியம் சொல்பவர், கணவரான பிறகு ஒரு மனைவியாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து பதறும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பவர், பாடல் காட்சியில் ஆடை குறைப்புடன் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்ல துடிக்கும் ஒரு பயிற்சியாளராக நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான அவரது கதாபாத்திர வடிமைப்பு மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அளவான நடிப்பு படத்தை தூணாக தாங்கிப் பிடிக்கிறதுவிளையாட்டை வியாபரமாக்கி சம்பாதிக்கும் தொழிலதிபர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் அத்துல் குல்கர்னி.. Casting : Sharwanand, Rajasekhar, Malvika Nair, Atul Kulkarni



Directed By : Abhilash Reddy



Music By : Ghibran Vaibodha



Produced By : UV Creations - V. Vamsi Krishna Reddy, Pramod Uppalapati

கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம்

 

கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம் 

கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’. இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தி யோசிக்க வைத்திருக்கிறார்.


 

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தமாக கையாண்டு பாராட்டுப் பெறும் சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில் எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். சமுத்திரக்கனிக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் அவரது மனைவியாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை தனது கண்கள் மூலமாக வெளிக்காட்டியிருக்கும் அவர், ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும், என்ற தன் மனநிலைக்கு கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்களில் எதார்த்தமாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்கள். நெரிசல் மிக்க நகரம் மற்றும் நகரத்தில் இருந்து விலகியிருந்தாலும் அமைதி நிறைந்த நாயகனின் குடியிருப்பு மூலம் மனிதர்களின் வேகமான வாழ்க்கையையும், ரசிக்க மறந்த வாழ்க்கையும் மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன்.

 

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் (Musicloud Studio & Technology) இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

 

ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டுமே தவிர, பிறரிடம் இருப்பதை நாமும் வாங்கி வாழ வேண்டும், என்ற ஆசையில் சிக்கி அவஸ்த்தைப்படக் கூடாது, என்பதை சிந்திக்க வைக்கும்படி சொல்லியிருக்கும் படம், குடும்பத்திற்காக பொருள் தேடுகிறோம் என்ற பெயரில் அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதை தவறவிடக்கூடாது, என்று வெளிநாட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் அறிவுரை சொல்கிறது.

 

மெதுவாக நகரும் திரைக்கதை, எதார்த்தத்தை மீறிய கதாபாத்திர வடிவமைப்பு போன்றவை குறையாக தெரிந்தாலும், தேவையற்ற ஆசையால், நிம்மதியற்ற வாழ்க்கை வாழும் மக்களுக்கு நல்ல அறிவுரை சொல்வதோடு, எது வாழ்க்கை என்ற உண்மையை மக்களுக்கு புரிய வைக்கும் இயக்குநர் ராம் சக்ரியின் முயற்சி, குறைகளை மறைத்து படத்தின் நிறைகளை மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ மக்களுக்கான படம்.

நீளிரா’ திரைப்பட விமர்சனம்

 நீளிரா’ திரைப்பட விமர்சனம்


தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘நீளிரா’ ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.

விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது. ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போர்ச்சுழலில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன ஆனாது ? என்பதை கமர்ஷியல் திரைப்படத்திற்கான விறுவிறுப்புடனும், ஈழ மக்கள் எதிர்கொண்ட மன போராட்டங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் விதத்திலும் சொல்வது தான் ‘நீளிரா’.


 


இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா மற்றும் போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள்.ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் ஈழ பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, ஒரு சில வசனங்கள் மூலமாக அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அத்துமீறிய செயல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீது இருக்கும் பயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.


 


நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். 


 


இரவில் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களையும், அவர்களது இக்கட்டான சூழல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பதற்றத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்தி அவர்களிடத்திலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். கே இசையில் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும், ஈழ மக்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் உயிரூட்டும் விதமாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


 


ஒரு வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த கதைக்குள் இருக்கும் உலக அரசியலையும், ஈழ மக்களின் வலியையும் படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கிறார். யுத்தமும், இரத்தமும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், அம்மக்கள் அனுபவித்த வலியை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்து, படம் முழுவதும் ஒருவித படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.


 


ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த வலிகளை காட்சிப்படுத்திய திரைப்படங்களுக்கு மத்தியில் முதல் முறையாக அமைதிப்படை என்ற பெயரில் அங்கு அட்டூழியம் செய்த இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், வசனங்கள் மூலம் அவர்கள் சமாதானம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சண்டையிட்டதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் போராளிகளின் காதல் மற்றும் அவர்களின் கனவுகள், ஈழ மக்களின் பூர்வீகம், அவர்களின் உரிமைகள் பரிப்பு, அவர்கள் ஆயுதம் ஏந்தியதன் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம், என ஈழ போராட்டத்தின் முழு வடிவத்தையும் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் மிக தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் சோமிதரன், எதையும் பிரச்சாரமாக பேசி காட்சிகளின் நீளத்தை நீட்டிக்காமல், அனைத்தையும் சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பேசியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது மொத்தத்தில், ‘நீளிரா’ ஈழ மக்களின் மகிழ்ச்சியிலும் மறைந்திருக்கும் வலியை உணர வைக்கிறது. 

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி*

 *விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி*



சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம்.


தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி - பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.


வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும் பாரம்பரியமும் சோதிக்கப்படும் அரங்குகளில், பாண்டிமுனி எதிர்பார்ப்புகளை முறியடித்து, மரியாதையை வென்று, உடைக்க முடியாத மனவலிமையின் சின்னமாக மாறுகிறது. இது வெற்றிகளைப் பற்றிய கதை மட்டுமல்ல — ஒற்றுமை, நம்பிக்கை, மனிதன் மற்றும் காளை இடையேயான உறவைப் பற்றிய கதை.


தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது.


விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.


விமல் கூறுகையில்:

"இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது."


இயக்குனர் கேந்திரன் கூறுகையில்:

"‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை."


நட்டி கூறுகையில்:

"‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்."


டி. இமான் கூறுகையில்:

"இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது."


‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது. பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.


‘வடம்’ தற்போது சன் NXT-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது... காணுங்கள், எங்கேயும்... எப்போதும்...


சன் NXT பற்றி:


சன் NXT, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விருப்பமான முன்னணி OTT தளமாக திகழ்கிறது. 4000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 7-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கங்கள் ஆகியவற்றுடன், உயர்தர தென்னிந்திய பொழுதுபோக்கை வழங்குகிறது.


திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் விரைவான வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.

Kaalidas 2 movie Review

 Kaalidas 2 movie Review 


புறநகர் சென்னையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது. இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார்.  குழந்தையின் இறப்புக்கு காரணம் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் பரத்தின் புலன் விசாரணை ஒரு பக்கமும், அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று நிரூபிக்க போராடும் பவானி ஸ்ரீ, அதிரடியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது. இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ? என்பதை பரத் எப்படி கண்டுபிக்டிக்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘காளிதாஸ் 2’.


 


கதையின் மையக்கரு ஒரு சம்பவம் என்றாலும், அதற்கான திரைக்கதையில் பல்வேறு குற்ற சம்பவங்களை இணைத்து, அதன் மூலம் பல்வேறு திருப்பங்களோடு படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், குற்றவாளி யார் ? என்பதில் கடைபிடித்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார். காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், முதிர்ச்சியான நடிப்பின் மூலம் உண்மையான காவல்துறை அதிகாரியை பிரதிபலித்திருக்கிறார். போலீஸுக்கான துணிச்சலுடன் பயணித்தாலும், நிதானமான அனுகுமுறை மற்றும் கூர்மையான விசாரணை மூலம், நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் எப்படி சாமர்த்தியமாக கையாள்வார்கள், என்பதை தன் நடிப்பின் மூலம் பரத் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார். ஜோடி, காதல் பாட்டு, கதாநாயகன் அறிமுகப்பாடல், என கமர்ஷியல் ஹீரோவுக்கான எந்த அம்சங்களும் இல்லை என்றாலும், காளிதாஸ் என்ற காவல்துறை அதிகாரியை மக்கள் மனதில் பதிய வைப்பதில் பரத், சிறப்பான பங்களிப்பை வழங்கி படம் முழுவதும் பளிச்சிடுகிறார் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே அமைதியான முகத்தோடும், பல்வேறு விசயங்களை பேசும் கண்களோடும் அறிமுகமாகி கவனம் ஈர்க்கும் அஜய் கார்த்தி, திருப்பம் மிக்க கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். 

காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, களப்பணி பற்றி சரியாக தெரியாமல், பதவி அதிகாரத்தின் மூலம் அதிரடியாக செயல்பட்டு, பிறகு அவஸ்தைப்படும் ஆர்வகோளாறு அதிகாரிகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். அனந்த் நாக், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


 


படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களின் கவனம் வேறு எந்த பக்கமும் திரும்ப கூடாது என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதிலும் குறிப்பிட்ட ஒரு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் சென்னையை பல்வேறு கோணங்களில் காட்டி, அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக பேச வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அதிகப்படியான சத்தம் இல்லாமல் படம் முழுவதுதிலும் ஒருவித அமைதியான சூழல் இருப்பதற்கு ஏற்ப பின்னணி இசையிலும் ஒருவித அமைதியை பின்பற்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்சாம்.சி.எஸ்.


 


ஒரு குற்ற சம்பவத்துடன் தொடங்கும் கதையின் பயணம் பல்வேறு சம்பவங்களின் கோர்வையாக விரிவது தான் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் பாணி, என்றாலும் இயக்குநரின் திருப்பங்களை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசனின் பணியும் பாராட்டுக்குறியது.  படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டினாலும், திரைக்கதையில் அவர்களுக்கான பங்களிப்பு அதிகம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கும் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், கதையில் இருக்கும் ஒரு சம்பவத்துடன், பல குற்ற சம்பவங்களை இணைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு படத்தை வேகமாக நகர்த்தி சென்றாலும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதன் பணிச்சுமை ஆகியவற்றுடன் அதிகாரிகளின் இக்கட்டான சூழ்நிலை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் பார்வையாளர்களை இழுத்து விடும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், அடுத்தடுத்த காட்சிகளில், கதையை பல அடுக்குகளாக மாற்றி, ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு திருப்பம், ஒரு சஸ்பென்ஸ் என்று படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதோடு, இறுதிக் காட்சியிலும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து ‘காளிதாஸ்’-ன் வெற்றிப் பயணம் 2ம் பாகத்தையும் கடந்து தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ காவல்துறைக்கு பெருமை சேர்க்கும்

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!*

 *விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி! 



அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.

ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது*

 *'ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது 



செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.


சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.


நடிகர்கள் பஸில் ஜோசப் - L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.


காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.


தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!*

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!! 



KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.


நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.


இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு:


திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா

கதை – தம்பி ராமையா

இசை – தர்புகா சிவா

ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா

எடிட்டிங் – அரள் R. தங்கம்

கலை – NK ராகுல்

ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ

நடனம் – சாண்டி, பிரவீன்

தயாரிப்பு மேற்பார்வை - ஶ்ரீநாத் விஸ்வநாதன் 

தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி

மக்கள் தொடர்பு – AIM சதீஷ்