-

Loading latest news...

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

 ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு! Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை!





ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் - இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இந்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளனர். சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, திலகேஷ், பரத்பாலாஜி ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். இந்த ஆவணப்படத்தை தயாரித்து, குரல் நெறியாள்கை செய்துள்ளதுடன், இசை அமைத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. சுமார் ஓராண்டு காலம் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மீதான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளிவரும் வரை காத்திருந்து, எல்லா முடிவுகளையும் தொகுத்து பல்லாண்டுகள் கடின உழைப்பின் பயனாய் சுவாரஸ்யமாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்' “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பட்டுள்ள இப்படம் தற்போது துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் திரையிடலில் 'பொருநை' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் ஆவணப்படம் 'பொருநை' என்பது குறிப்பிடத்தக்கது.