byri part-1-movie-review புறா பந்தயத்தை பின்னணியாகக் கொண்ட மாறுபட்ட கதைக்களம் படம்: பைரி
நடிப்பு: சபீர் மஜீத், மேக்னா ஹெலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார் ,கார்த்திக் பிரசன்னா, பிரான்சிஸ், கிருபா, ராஜன்
தயாரிப்பு: வி.துரைராஜ்
இசை: அருண்ராஜ்
பாடல்: பொன் மனோபன்
எடிட்டிங்: ஆர்.எஸ்.சதீஷ்குமார்
ஒளிப்பதிவு: ஏ. வி.வசந்தகுமார்
இயக்கம்: ஜான் கிளாடி
ரிலீஸ்: சக்தி பிலிம் பேக்டரி
பி ஆர் ஒ: நிகில் முருகன் ஒவ்வொரு வருடமும் அறிமுக இயக்குனர்கள் வாழ்வியலை சொல்லும் சில படங்களை தந்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள். சென்ற வருடம் அயோத்தி, பம்பர் போன்ற படங்களை சொல்லலாம். இந்த 2024 ஆம் வருடம் இப்போது வெளியிடவிருக்கும் பைரி என்ற படத்தை இந்த வரிசையில் சேர்க்கலாம்.
பைரி என்றால் கழுகு என்று பொருள். இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி நாகர்கோவிலில் நடைபெறும் புறா பந்தயத்தை மையப்படுத்தி கதை களத்தை உருவாக்கி உள்ளார். நாகர்கோவிலில் வசிக்கும் இளைஞன் லிங்கம் படித்து விட்டு வேலைக்கு போகாமல் புறா பந்தயம் நடத்துகிறான். ஊரில் உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா பந்தயம் நடத்துகிறார். பந்தயத்தில் சுயம்பு செய்யும் ஊழலை லிங்கம் கண்டுபிடித்து பிரச்சனை செய்ய இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் லிங்கத்தின் நண்பர் தாக்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடுகிறார். லிங்கம் பந்தயமே வேண்டாம் என்று வேலை தேடி சென்னை செல்கிறார். இத்துடன் முதல் பாகம் முடிவடைகிறது.
படத்தில் பாராட்டபட வேண்டிய முதல் விஷயமாக இருப்பது புறா பந்தயம்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் சிறிய பட்ஜெட்டில் பந்தய காட்சிகளை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவின் புறா ஜெயிக்கவேண்டுமே என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு கொண்டு வந்து விடுவதே இயக்குநருக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
புறாக்களில் இருக்கும் வகைகள் பற்றியும், இவை பறக்கும் தூரங்கள் பற்றியும், பாடமாக இல்லாமல் சுவாரசியமாக புரிய வைத்துள்ளார் டைரக்டர். நாகர்கோவில் பகுதியில் நான்கு தலைமுறைகளாக நடக்கும் புறா பந்தயத்தின் பின் உள்ள வரலாறு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த காட்சிகளுக்காக VFX சேகர் முருகன் நிறைய உழைத்திருக்கிறார்.ரேக்ளா ரேஸ். கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம். என பல விளையாட்டுகளை பார்த்திருக்கிறோம் புறாவை பறக்கவிடும் போட்டி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அது பற்றி இதுவரை முழுமையாக எந்த படமும் வந்தது இல்லை அந்த விளையாட்டை மையமாக வைத்து வித்தியாசமான படமாக உருவாகி இருக்கிறது பைரி.
ஹீரோ லிங்காவாக நடித்திருக்கும் புதுமுகம் சையத் மஜீத், அமலாக நடித்திருக்கும் ஜான் கிளாடி, சுயம்புவாக நடித்திருக்கும் வினு லாரன்ஸ் சபீரின் தாயாக நடித்திருக்கும் விஜி சேகர். இவர்களின் கதாபாத்திரங்கள் படத்தில் முக்கிய பொறுப்பை வகிக்கின்றன. இந்த பாத்திரங் களில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த கதாபாத்திரங் களின் உயிர் உருவாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
புறா வளர்க்க கூடாது என்று தனது மகன் சபீரை தாய் விஜி சேகர் எவ்வளவோ முறை கண்டிப்பதும் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது தாய் சொல்லை மீறி புறா வளர்க்க தொடங்கும் சபீர் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதுபோல் அம்மாவையே வாடி போடி என்று திட்டி தீர்க்கும் அளவுக்கு கோபமாவதும், சபீருக்கு தோழனாக வரும் ஜான் கிளாடியை தன் மகன் கெட்டுப் போவதற்கு நீதான் காரணம் என்று சபீர் தாயார் திட்டி தீர்ப்பதும் நாம் கண்கூடாக பார்க்கும் சம்பவங்கள்.
புறா வளர்ப்பு மற்றும். அதை போட்டியில் பங்கேற்க வைக்கும் விதம் பற்றி இயக்குனர் ஜான் கிளாடி புள்ளி விவரம் எடுத்து கதையை உருவாக்கி இருப்பது பெரிய பிளஸ். அந்த போட்டிக்காக இளைஞர்கள் தங்கள் உயிரை கூட பணயமாக வைப்பதெல்லாம் போட்டியில் அவர்கள் வைத்தி ருக்கும் வெறித்தனத்தை வெளிப் படுத்துகிறது. இதில் சரியாக நடிக்காதவர்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது. பிரதான கதாபாத்திரங்களும் சரி, துணை கதாபாத்திரங்களும் சரி, ஏன்? பல சமயங்களில் புறாக்களே கூட அருமையாக நடித்து படத்தை வேகமாக கொண்டு செல்ல உதவியிருக்கின்றன.
வில்லன் வினு லாரன்ஸ் நடுவரை கைக்குள் போட்டுக்கொண்டு அதோ புறா வருகிறது, இதோ புறா வருகிறது என்று பொய்யாக காட்டிக் கொடுப்பதை பார்க்கும் சபீர் அவரது ஏரியாவுக்கே சென்று எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பில் ஈடுபடுவதும், வெட்டு குத்து என்று காட்சிகள் மாறுவதும் பதைபதைக்க வைக்கிறது.
யாருமே எதிர்க்கத் துணியாத வில்லனை சமீரும், ஜான் கிளாடியும் எதிர்ப்பது கதைக்கு ஆக்ஷன் களமாகிறது
தன்னை எதிர்க்கும் சபீரை வினு கத்தியால் குத்தும்போது சபீர் கதி அவ்வளவுதான் என்ற பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
நண்பனுக்காக வில்லனை கத்தியால் குத்த துணிச்சலாக செல்லும் ஜான் கிளாடி ஒரு வேகத்தில் வில்லனை கடப்பாரையால் குத்தி விட்டு பின்னர் உயிர் பயத்தால் நடுங்கி, பதுங்கி, கண்ணீர் விட்டு கதறி அழுவதெல்லாம் ஆத்திரக் காரர்களை சிந்திக்க தூண்டும்.
ஜான் கிளாடியை கொல்லக் கூடாது என்று பல தரப்பினரும் வற்புறுத்திய பிறகு ஒப்புக் கொள்ளும் வில்லன் அதையும் மீறி ஜானை ரத்த வெள்ளத்தில் வெட்டி சாய்ப்பது அதிர்ச்சி.
பல கதாபாத்திரங்கள் குறிப்பிட்டு சொல்ல வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அசர வைத்திருக் கின்றன. குறிப்பாக ரமேஷ் பண்ணையாராக வரும் ரமேஷ் ஆறுமுகம் இரு தரப்புக்கும் சமாதானம் செய்வதும் தேவைப் பட்டால் அடி கொடுப்பதும் என்று ஜென்டிலாகவும் நடித்து யார் இந்த புதுமுகம் என்று கேட்க வைக்கிறார்
மேலும் மேக்னா ஹெலன், சரண்யா ரவிச்சந்திரன், ஆனந்த் குமார், கார்த்திக் பிரசன்னா பிரான்சிஸ் கிருபா, ராஜன் ஆகியோரும் உயிர் பாத்திரங்க ளாக உலா வந்திருக்கின்றனர்.
வி . துரைராஜ் படத்தை தயாரித்தி ருக்கிறார்.
ஜான் கிளாடி எழுதி இயக்கியிருக் கிறார். இதை படமாக காட்டாமல் அப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று நேரில் காண்பது போல் காட்சிகளை அமைத்திருப்பது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி.
படத்தின் காட்சிகள் கண் முன் விரிந்தாலும் அந்த காட்சிகளை வில்லுப்பாட்டாக மாற்றி அமைத்து தொடக்கம் முதல் இறுதி வரை நம்மோடு பயணிக்கும் கவிஞர் பொன் மனோபனின் வார்த்தை விளையாட்டுக்கள் நம்மையும் அறியாமல் மனதிற்குள் பதிந்து விடுகிறது. இப்படத்துக்கு பிறகு கவிஞர் பொன் மனோபனுக்கு பாடல் வாய்ப்புகள் ஏராளமாக தேடி வரும்.
இசையமைப்பாளர் அருண் ராஜுக்கு சினிமா வெளிச்சம் பெரிய அளவில் இப்படம் மூலம் கிடைக்கும்.
ஒளிப்பதிவாளர் ஏ.வி. வசந்த குமார் சினிமாத்தனம் இல்லாமல் படமாக்கி இருப்பது வெற்றிக்கு கை கொடுக்கும்.
காட்சிகளை எப்படி கச்சிதமாக எடிட் செய்தார் என்று ஆச்சரியப்பட வைக்கிறார் எடிட்டர் ஆர் எஸ் சதீஷ்குமார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
பைரி பருந்து வகை சேர்ந்த பறவை. வானத்தில் பறக்கும் புறாக்களை அடித்து கொல்லும். அதையும் ஒரு கதாபாத்திரமாக இணைந்திருக்கிறார்கள்.
