லாந்தர் (பட விமர்சனம்)
அரவிந்த் (விதார்த்) போலீஸ் உயர் அதிகாரி. அவரது மனைவி ( ஸ்வேதா) வித்தியாசமான ஒரு பாதிப்பால் அவதிப்படுகிறார். இருள் அல்லது அதிர்ச்சி தகவலை கேட்டால் மயங்கி விடுவார். அவரது இந்த பயத்தை போக்க அரவிந்த் மருத்துவ சிகிச்சை அளித்து
வருகிறார். அதேபோல் இளஞ் ஜோடிகள் நகுல்(விபின்), மஞ்சு (சஹானா) மற்றொருபுறம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மஞ்சு கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் நகரில் ஒரு மர்ம நபர் கையில் ஆயுதம் வைத்துக் கொண்டு எதிரில் யார் தென்பட்டாலும் அவர்களை அடித்துக் கொல்கிறார். இதனால் போலீஸ் அதிகாரி அரவிந்த் மர்ம நபரை பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார். இந்த போராட்டத்தில் போலீஸ்காரர்களே பலர் மர்ம நபரிடம் அடி வாங்கி மருத்துவமனையில் அட்மிட் ஆகின்றனர். சைக்கோ மர்ம நபர் யார்? அவரால் அரவிந்த் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்ற சஸ்பென்ஸ் கேள்விகளுக்கு படம் திரில்லான பதில் அளிக்கிறது.
படத்திற்கு லாந்தர் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் ஆனால் டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை. கதையை பொறுத்தவரை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது.விதார்த் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் சினிமா போலீசாக மாறிவிடாமல் எதார்த்தமான பாடிலாங்குவேஜ் கடைப்பிடித்து ஹீரோயிசத்தை தவிர்த்து இருக்கிறார்
பல ஹீரோக்கள் இந்த பாத்திரத்தில் தான் கொடி நாட்டி இருக்கிறார்கள். ஆனால் விதார்த் இந்த அரிய வாய்ப்பை தவற விட்டிருக்கிறார்
போலீஸ் அதிகாரியாக பெரிய பரபரப்பு காட்டாமல் சக அதிகாரிகளிடம் மென்மையாக நடந்து கொள்வது, மனைவியின் உடல் நிலையை எண்ணி அவ்வப்போது மன உளைச்சல் கொள்வது என மனிதத்தை அதிகம் வெளிப்படுத்துகிறார். இது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
அதட்டலான சினிமா போலீசையே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு விதார்த்தின் போலீஸ்கார பாத்திரம் உப்பு சப்பு இல்லாமல், சூடு சுவை இல்லாமல் மந்தமாகவே தெரிகிறது. விதார்த் மனைவியாக வரும் சுவாதி மடிப்பு கலையாத உடையில் வந்து மயங்கி விழுவது எழுந்து நடப்பது என்ற வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார்.
இவர் என்ன நடித்து விடப் போகிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் சஹானா மிரட்டலாக நடித்து பரபரப்பை ஏற்படுததி விடுகிறார். சில காட்சிகளில் சந்திரமுகி ஜோதிகாவை கண்முன் நிறுத்துகிறார். மற்ற துணைப் பாத்திரங்கள் எதுவும் பெரிதாக எடுபடவில்லை.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் என்றால் காமெடிக்கு இடமே தரக்கூடாது என்று இயக்குனர்கள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ இந்த படத்திலும் அதற்கு பெரும் பஞ்சம் நிலவுகிறது. இது படத்துக்கு மைனஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
ஸ்ரீ விஷ்ணு படத்தை தயாரித்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஆக்சன், செண்டிமெண்ட் என்று எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தடித்து அசர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் ஷாஜி சலீம். சஸ்பென்ஸ் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கதையை எங்கெங்கோ கொண்டு சென்று இழுத்தடிப்பது அலுப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் சஸ்பென்சை ஓபன் செய்யும்போது இழுத்தெடுப்புக் கெல்லாம் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் கார் சேஸிங் காட்சிகளில் திணறி இருக்கிறார். 100 கிலோமீட்டர் வேகத்தில் கார் கேசிங் நடப்பதாக சொல்லிவிட்டு அதை ஆமை வேகத்தில் படமாக்கி இருப்பது ஆக்சன் காட்சியை தொய்வடைய செய்கிறது. ஸ்டண்ட் இயக்குனர் இந்த காட்சியில் இன்னும் கவனம் செலுத்திருந் தால் திரில்லான பல காட்சிகளை அமைத்திருக்கலாம்.